Thursday, July 31, 2025

 This one's for her 60th birthday


கேரளமே இவள் தேசம்; மலப்புரமே இவளூராம்

ஓரளவே மலையாளம்; கொஞ்சு தமிழ் இவள் மொழியாம்

பேரன்பே இவளியல்பு; தாய்மைக்கோர் இலக்கணமாம்

சேரத்தின் கோவிலகம் மரபில் ஓர் திருமகளாம்

பேரிலுள்ள சீலமது வாழ்வினிலே நடைமுறையாம்

கார்மேகம் காதலிலே; கனிந்தென்னை நோக்கினளே

ஓருயிராய்க் கலந்ததனால் இல்வாழ்வு காவியமாம்

ஈரைந்து ஆறாக ஆண்டுகள்தாம் நிறைந்தனவே                             பேரொளியாய் வந்தவளே பேரின்பம் தந்தவளே

நாரணன்தன் அருளாலே நூறாண்டு வாழ்ந்திடுக



தூணிலும் துரும்பிலும் இருப்பதோர் சக்தி

ஆணையும் பெண்ணையும் படைத்ததோர் சக்தி

காணுதற் கரிதாம் கண்டவர் வசமாம்

பேணுவது அதுவே பிறப்பிப் பததுவே

கோணாத கோலும் பிழைக்கின்ற போது

நாணாது மறத்தை அழிப்பது மதுவே

ஆண்டவன் என்றும் அருள்பவன் என்றும்

ஈண்டிங்கு பலதாம் பெயர் கொண்ட ழைப்பார்

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பென

யாண்டும் சக்கரம் சுழல்வது அதனால்

காண்மின் காண்மின் அதனின் ஓர் துமியை

மாண்பினை வியந்தோம் சிறிதாய் உணர்ந்தோம்





மீண்டும் பிறந்தேன் உன்னால் நிறைந்தேன்


மீண்டும் பிறந்தேன் அம்பிகை சொல்லால்

மண்ணிலே சொர்க்கம் கண்டு மீள்கென்றாள்

விண்ணி லன்றோ அதுவென வியந்தேன்

தண்ணிலவு நீ வர உண்மை உணர்ந்தேன்

எண்ணில் அடங்கா அனுபவ ங்களுண்டு

எண்ணின் திகட்டாத அமுதக் கணங்கள்

பண்ணென இனிதாய் வாழ்க்கை நகர

யாண்டும் மணக்கும் காவிய இல்லறம்

பண்டு வள்ளுவன் புகழ்ந்த நல்லறம்

வேண்டிய படியே கிட்டிய வரமே

நீண்ட பயணத்தின் சாரதி ஆனாய்

வேண்டேன் பிறவி உன்னால் நிறைந்தேன்

 மாசில்லாத் தமிழ் கூறும் மாண்பு மிக்கோர் சபையினிலே

ஈசனேதான் ஆனாலும் குற்றத்தை இடித்துரைக்கும்

நக்கீரன் வழி வந்தோர் இருப்பதுவும் ஓர் சிறப்பே

தக்கதோர் வழியாமே நம் தமிழை நாம் வளர்க்க



அறுபதைக் கடந்தாலும் தாடியது நரைத்தாலும்

கற்பதை நிறுத்தவில்லை

கல்வியது தொடர்கிறது

வயதறியாத் தமிழன்னை சாந்நித்யம் என் முன்னே

தயங்குகிற பாலகனாய்த் தவழ்கின்றேன் அவள் மடியில்

ஆத்திரங்கள் ஒன்றுமிரா; தயங்காமல் தவறுரைப்பீர்

நாத்தனார் மகனெனவே சாத்திரங்கள் பார்க்காதீர்




கண்ணனைப் பாடுமின் கண்ணனைப் பாடுமின்

நுண்ணிய பொருளினுள் நுண்மையாய் நிற்பவன்

எண்ணத்தில் உயர்வதைத் தருமமாய்ச் சொன்னவன்

கிண்ணத்தில் சோறிடின் குழந்தையாய் வருபவன்

திண்ணமாய் யோகத்தின் நெறியதைத் தந்தவன்

வண்ணமாய் அறந்தனைப் புரக்கவே பிறப்பவன்

அண்மையில் இருந்தும் காணுதற் கரியவன்

நண்பனாய் இருந்து அறிவுரை சொல்பவன்

தண்மையில் நிலவதன் ஒளிபோல் குளிர்பவன்

வண்மையில் தனக்கு நிக ரில்லாதவன்

கண்ணனைப் பாடுமின் கண்ணனைப் பாடுமின்




தூணிலும் துரும்பிலும் இருப்பதோர் சக்தி

ஆணையும் பெண்ணையும் படைத்ததோர் சக்தி

காணுதற் கரிதாம் கண்டவர் வசமாம்

பேணுவது அதுவே பிறப்பிப் பததுவே

கோணாத கோலும் பிழைக்கின்ற போது

நாணாது மறத்தை அழிப்பது மதுவே

ஆண்டவன் என்றும் அருள்பவன் என்றும்

ஈண்டிங்கு பலதாம் பெயர் கொண்ட ழைப்பார்

மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பென

யாண்டும் சக்கரம் சுழல்வது அதனால்

காண்மின் காண்மின் அதனின் ஓர் துமியை

மாண்பினை வியந்தோம் சிறிதாய் உணர்ந்தோம்



கண்டதைச் சொன்னேன்  கடிந்தனர் மாக்கள்

உண்மையை ஆரே உவப்புடன் ஏற்பர்

கோமாளி எனவே கடந்து செல் கின்றார்

எமக் கொரு லாபமோ நட்டமோ இல்லை

இன்பமும் துன்பமும் அவரவர் விதியாம்

என் கடமை இங்கே மௌனமாய்க் காணல்

காண்கின்ற யாவும் விண்டுரைப் பதிங்கே

கண்ணன் ஒவ்வாச் செயலெனத் தெளிந்தேன்

நலமாய் வாழ்ந்து நீங்கிடும் வரையில்

உலகுண்ட வாயா! உள் நின் றொளிர்க!