புரிந்து வாழின் வாழ்க்கை ருசிக்கும்
புரிதல் இன்றேல் அதுவே கசக்கும்
விருப்பும் வெறுப்பும் சற்றே நகர்த்தி
இருப்பை மறைக்கும் அகந்தை அகற்றி
நம்மை நாமே கொஞ்சம் விலக்கி
சும்மா இருந்து சுற்றிலும் பார்க்கின்
நடப்பவை யாவும் நாடகம்; புரியும்
நடந்து வந்த பாதையும் தெளியும்
காட்சிகள் மாற காலங்கள் மாற
ஆட்சியை நடத்தும் ஆள் யார் தெரியும்
கொதித்தல் இன்றி குதியல் இன்றி
விதித்ததை ஏற்கும் பக்குவம் பெறுவீர்
ஆற்றிலே செல்லும் கட்டையைப் போல
காற்றிலே மிதக்கும் பட்டத்தைப் போல
மனம் எனும் ஒன்று இல்லா திருப்பின்
கனம் இருக்காது வாழ்தல் எளிதாம்

