Thursday, June 28, 2018

கோவிலூர் பதிகம்

1.                          கார் வண்ண  மேனியாய் கனிவான தேவியர்   சூழ 
நேர் நின்ற கண்ணனே ! கோவிலூர் உறை நாரண !
பதினாறில் நினைப்பாடும் சிந்தை  தாராமல் ; 
பத்தாறு பிராயத்தில் நாவிலே வந்து நின்றாய்
இனி உள்ள காலம் நின்னை நினைந்துருகி  
இனிய தமிழால் உளம் நிறைந்து உனைப் பாட  
முற்றாய்ச் சூழ்ந்திருக்கும் பண்டை வல் வினையும்
பற்றும் அறுத்து  என்னை உய்விக்க வாராயோ 
கடிதான வாழ்விதிலே மாறி  வரும் இருமை மாற்ற 
முடிவில்லா உன் விளையாட்டை நிறுத்தி நீ நேரில் வா  

2.                         நின்னை அடுத்திலேன்    நல்  எண்ணங்கள்  வளர்த்திலேன்
முன்னைக் கருமங்கள்  தொலைக்க  முயன்றிலேன்
பின்னைப்  பிறவிகள் ஓர்த்தே  தீவினை   நிறுத்திலேன்
என்னையே எண்ணி வாழும் இக் கீழ்மை சற்று  மாற்றி
உன்னையே சரண் புகுந்து உன் கழல் பற்றி வீழும்
நன்மை என்னில்  வாராதோ மூவுலகு அளந்த பெரும!
சென்னி உன் பாதம் வைத்தேன் சீராக என்னை ஆள்வாய் 
பன்னிப்  புனைந்த  பாமாலை பரிவோடு ஏற்றுக் கொள்வாய்
பின்னிப் பிணைந்த இருவினையும் மாற்றி என்னை
உன்னிலே சேர்த்தருள்வாய் கோவிலூர் வாழும் கோவே

3.                         ஊனுக்குள் உயிரை வைத்து  உடலுக்கோர் பெயரை வைத்தான்
நானென்ற அகந்தை தன்னை அகத்திலே மறைத்து வைத்தான்
மானிடர் அறிவை என்றும் மாயையால் மூடி வைத்தான்
தான் நேரில் நின்ற பொழுதும் காணாமல் செய்து வைத்தான்
குருடராய் மாந்தர் இங்கே மடமைகள் பலவும் செய்து
இருட்டிலே கிடந்துழன்று ஏங்கியே அழுத போழ்தில்
எட்டிய சிலரை மட்டும் ஒளி காட்டி அழைத்துச் சென்றான்
மட்டிலாக்  கருணை கொண்ட மாயனுக்கிது அழகோ
நானிலம் மாலிருஞ்சோலை  வானும் கடலும் அவன் வண்ணம்
      ஏனிருப்பதின்னும் இங்கே வழி காட்ட வா கோவிலூர்க் கோவே  

Tuesday, June 19, 2018

"ல" வுக்கும் "ள" வுக்கும் மற்றும் "ர" வுக்கும்  "ற"  வுக்கும் வேறுபாடு அறியாது தமிழில் பதிவிடுகிறார்கள்.
 "பள்ளி கொள்" என்று எழுதச்  சொன்னால்  "பல்லி கொல்"  என்கிறார்கள்.  தமிழ் கொல்லும் இக்கூட்டத்தை என்ன செய்வது?  ஒரு  கையாலாகாத  கோபம் மேலிடுகிறது.




ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ள இந்நிலையில் இப்பதிவு முக்கியமாகிறது. மொழி ரீதியாக இதை அணுகுவது சரியில்லை. அப்படிப் பார்த்தால் எம் ஜி ஆர் தமிழரல்ல. கருணாநிதி  அண்ணா விஜயகாந்த் மற்றும் வை கோ போன்றோர் கூடத் தெலுங்கர்கள் என்று கேட்டிருக்கிறேன். ஜெயலலிதா  ஒரு கன்னடர் என்கிறார்கள்.   எந்த  மொழியானால் என்ன? அவர்கள் இந்தியர்கள். அது போதும்.

 தமிழர் வேற்று நாட்டில் அமைச்சரானால் பதவி பெற்றால் கொண்டாடும் நாம் மொழி அடிப்படையில் ரஜினியை எப்படி எதிர்க்கலாம்.   இது ஒரு குறுகிய மனப்பான்மை.
ஒரு மன நோய். 

நடிகர் அரசியலுக்கு வரக் கூடாது என்கிறார்கள். அப்படியானால் எம் ஜி யாரை ஜெயலலிதாவை விஜயகாந்தை  எப்படி ஏற்றோம்? அண்ணாவும் கருணாநிதியும் இப்போதைய சீமான் வரை  
 திரைத் துறையிலிருந்து வந்தவர்கள் தானே? 

பலரும் ரஜினியை விமர்சிக்கிறார்கள். என்னவோ அவர் பல கோடி சம்பாதிப்பது ஒரு பாபம்  என்பது  போல் பேசுகிறார்கள். தமிழ் நாட்டுக்கு அவர் பங்களிப்பு என்ன என்று கேட்கிறார்கள். உங்களை உயர்த்தியது நாங்கள்தானே  என்று அங்கலாய்ப்பு வேறு.  இது ஒரு தனி மனிதனின் உழைப்பு. உங்களை அவர் ஏமாற்றவில்லை. நீங்கள் காசு கொடுத்துப் படம் பார்த்தீர்கள். உங்கள் சந்தோஷத்திற்காக. அவர் படத்தில் நடித்தார் பணம் சம்பாதிக்க. அது அவர் தொழில்.  இதில் தமிழ்நாட்டிற்குச் சேவை செய்ய ஒரு நிர்பந்தமும்  இல்லை. இங்கே இன்வெஸ்ட் செய்யவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு. மாறி மாறி வரும் மொழிப பிரச்னை  மாநிலப் பிரச்னை அவரைப் பயமுறுத்தி இருக்கலாம். நம்  நாட்டில்   மாநிலப்  பிரச்னை என்றால் இங்கே கன்னடர்களுக்கு அடி  அங்கே தமிழர்களுக்கு அடி  என்கிற நிலைமை இருக்கிறதே. என்றேனும் ஒருநாள் கடை கட்ட வேண்டி வந்தால் நம் ஊருக்குப் போய்விடலாம் என்கிற பாதுகாப்பின்மை உணர்வாய் இருக்கலாம். ஒருவர் எங்கே இன்வெஸ்ட் செய்ய வேண்டும் எவ்வளவு  தான தர்மம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட சுதந்திரம். 
எனக்கு ஒன்று தோன்றுகிறது. இது வெறும் பொறாமை. அடேயப்பா இவ்வளவு உயரமா இவ்வளவு பணமா என்கிற ஆத்திரம்.நமக்கு ஏதேனும்  கிடைக்காதா என்கிற நப்பாசை. பேராசை. என்னுடைய ஆயிரம் ரூபாயும்  அதில் இருக்கிறதே  என்று ஒரு மொட்டை நியாயம். இதன்  அடிப்படைக் காரணம் ஊடகங்கள். முன்பும் படங்கள் ஓடியதுண்டு  ஆனால் இப்போது போல் புள்ளி விவரங்கள் சாமான்ய மனிதனை எட்டவில்லை. 500 கோடியாமே என்று வாய் பிளப்பது அதில் தான். எந்த ஊடகங்களால் வியாபாரம் நடை பெற்றதோ அதே ஊடகங்கள் புள்ளி விவரங்களையும் பரப்புகின்றன.
நான் கேட்கிறேன். மூவாயிரம் கொடுத்து ரஜினி டிக்கட்  வாங்கச் சொன்னாரா. உங்கள் முனைப்பு,  வெறி சினிமா எடுப்பவரின்  லாபம். மூன்று நாள் கழித்துப் பார்த்தால் என்ன? ஒரு வாரம் கழித்துப் பார்த்தால் டிக்கட் மூவாயிரம் விற்குமா?  ஏன்  முதல் நாள் முதல் ஷோ ? காலரைத்தூக்கி வீட்டுக் கொள்ள நீங்கள் செய்தது எப்படி நடிகரின் தவறாகும்? நீங்கள் ஒன்றும்  தியாகம் செய்து அவரைத் தூக்கி விடவில்லை.  லீவு போட்டுவிட்டு சினிமாவுக்குப் போனது அவர் குற்றமா? 
 தமிழன் என்கிறீர்களே? கலை என்று  வரும்போது, வியாபாரம் என்று வரும்போது, பொழுது போக்கு எனும் போது  மொழி எங்கே வருகிறது?  இப்படிச் சொல்கிறவர்கள் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ளவில்லை. தமிழ் சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் இல்லை. அது ஒரு  குற்றமாக எனக்குப் படவும் இல்லை. தங்களின் அநியாயமான குற்றச்சாட்டிற்கு ஒரு ஆதரவு சேர்க்கவே இந்த மொழிப் பிரச்னையை எழுப்புகிறார்கள் என்று  தோன்றுகிறது. தமிழரல்லாதோர் இங்கே வென்றால் அது தமிழர்களின்  பாரபட்சமற்ற ரசிகத்தன்மையையே குறிக்கிறது . அது நமக்குப்  பெருமையே. 
இது ஒன்றும் ரஜினிக்கு வக்காலத்து இல்லை.  ஏதோ படம் பார்த்தோம் போனோம் என்றில்லாமல்  நடிகனின் சம்பாத்தியம் எவ்வளவு என்று அலசுவதும் அவர் தனிப்பட்ட வாழ்வை விமரிசிப்பதும் அநாகரிகம் என்று பட்டது.
சமூகப் பொறுப்பும் பங்களிப்பும் (social responsibility) அவரவர் மனச்சாட்சியைப் பொறுத்த விஷயம்.
ரஜினி எங்குமே ஒன்றுமே செய்யவில்லை என்றும் சொல்ல முடியாது. கர்நாடகாவில் அவர் செய்கிறார் என்று அவருடைய விமர்சகர்களே  சொல்கிறார்கள். தவிர பல நலிந்த கலைஞர்களுக்குப் படம் செய்து கொடுத்துள்ளது உண்மை. அதில்  அவர் மொழி மாநில பேதம் பார்த்ததாகத் தெரியவில்லை. 
வென்றோரைக் கண்டு காய்தலும் தோற்றோர் முகத்தில் உமிழ்தலும் அறிவிலிகள் செய்யும் காரியம். ஒரு திரைப் படத்திற்கு அதற்கு உரிய மரியாதையை மட்டும்  கொடுங்கள். கபாலி படம் வெளியாகி இருக்கிறதா சரி அடுத்த வாரம் குடும்பத்தோடு போகலாம் என்று நினைத்து செயல் பட்டிருந்தால் அது தவறில்லை. 
 யாரோ பெற்ற  வெற்றியில் பங்கு தேடாதீர்கள்.  அதற்கு நானும் காரணம் என்பது சரியில்லை.   இப்படி மற்றவர் வெற்றியைக் கண்டு மலைத்து நின்று வெட்டிக்கதைகள் பேசி நின்றால்  வெல்லும் வாய்ப்பே இல்லை.. இதை விட நம்மை நாம் இழிவு படுத்திக்கொள்ளவே முடியாது.
சுஜாதா நம்மவர்களிடம் ஒரு phillistinism இருக்கிறது என்று எழுதிய போது  உறுத்தியது. அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார் என்று தோன்றுகிறது.

கல்வியின் மாண்பைக்  கற்றவர் சபை  விளக்கும் 
சொல்லிய கொடையின் பெருமையை  வறுமை  துலக்கும்
நல்லறத்தின் தகைமையை  முரணுறு கடமைகள் உரைக்கும்  
நல்ல ஞானத்தின் துலாக்கோல் தாம் கொண்ட புகழாம் 


முக நூலில் கவிஞர் மகுடேஸ்வரனின் ஒரு பதிவு  அற்புதம். ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களிலேயே  ஒரு சாரார் படித்துப்  புலம் பெயர்ந்து முன்னேறி வாழ்வதையும்  மற்றொரு  சாரார் வன்முறையிலேயே உழல்வதையும் இவர்கட்கு இடையே  உள்ள un bridgeable gap அதாவது  தொடர்பின்மை பற்றி மிக நுணுக்கமாக  விளக்கியிருக்கிறார். எப்போதும்  யாரையாவது வெல்ல வேண்டும்   என்ற உந்துதல் ஒரு மனப் பிறழ்வு  என்கிறார். 
அத்தகைய ஒரு உந்துதலே உறவுகளுக்குள் சண்டையாகிப் பின் பகையாகிக் கொலை வரை செல்கிறதென முடிக்கிறார்.  ஒரு சமூகப் பார்வையில் இது ஒரு Ph.D க்கு உண்டான தலைப்பு எனலாம். அறிவுக் கூர்மையும் சமூக அக்கறையும் இணைவது அரிது.  மஹா சக்தி அவர்க்கு எல்லா  நலமும் அளிக்கட்டும்.


முக நூலில் ஒருவர் பார்ப்பன எதிர்ப்பு அவசியம் என்று சொல்லியிருந்தார். நம்மூரில்தான் எல்லா அரசு அலுவலகங்களும் கல்லூரிகளும் அவர்களுக்குக் கதவை மூடிக் கொண்டு விட்டனவே.  இதில் பிராமண  டாமினேஷன்  எங்கிருக்கிறது? பார்ப்பன எதிர்ப்பாளர்களின் நோக்கம் என்ன ? பார்ப்பனர்களை ஒழிக்க வேண்டும்  என்பதா? அல்லது அவர்கள் இன்னும் வசதியாகவே இருக்கிறார்களே என்ற அங்கலாய்ப்பா? ஒதுக்கப்பட்ட போதும் பிராமணர்கள் கல்வியை இறுகப் பிடித்துக் கொண்டார்கள்.  அறிவும்  திறமையும் அவர்களின் வளர்ச்சியின் அடித்தளம்.   இதைச் செய்யும் யாரும் வளரலாம். ஒடுக்கினாலும் ஒரு சமூகம் வளரக்கூடும் என்பது இதிலிருந்து புலனாகிறது. அமெரிக்காவில் வெள்ளையர் அல்லாதவர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்ட போது  இதைத்தான் ஆபிரகாம் லிங்கன் சொன்னார். தகுதியை வளர்த்துக் கொள்ளும்போது வாய்ப்புகளும் மரியாதையும் தானே வரும். அரசு கொடுக்கவில்லையெனில் தனியார் நிறுவனங்கள் தரும்.  இது நிதர்சனம்.   இன்று ஜாதி என்பது ஒரு குழு மனப்பான்மை தவிர வேறில்லை.  ஒரே பழக்க வழக்கங்களை உடையவர்கள் கூடிக் கொள்வது  இயல்பு.  திருமண உறவுகளுக்கான   ஒரு comfort level . இது இன்று எல்லோர்க்கும் பொருந்தும். கடவுள் மறுப்பும் பார்ப்பன எதிர்ப்பும் இன்று இங்கே ஓட்டு அரசியல்; அல்லது  ஒரு அறிவு ஜீவிப் போர்வை.  அவ்வளவுதான். 

வசைச் சொல்லை உரமாக்கி வாழ்வினிலே உயர்ந்திட்டாய் 
கசையடிகள் பல பெற்றும் வெறுப்பின்றி   அன்பு செய்தாய் 
திசையறியா  மனிதர்க்கு வழிகாட்டும் பெருவிளக்கே 
இசை படவே இன்னும் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு 

மாறனால் வந்த எழுச்சி அலை பேசி உரையாடல்   
அம்மாவால் வந்த மலர்ச்சி ஏழையின் பசியாறல்  
இரண்டையும் மறுப்பதற்கில்லை ஆயினும் 
என் இதயம் ஏழையின் பக்கம் 
இது கட்சி சார்பல்ல மனித  நேயம் 
அலைபேசுபவர்களைக் காட்டிலும் 
நிலைத்த  பசியுள்ளோர் அதிகமிங்கே 
ஏழைக்கு எட்டும் தொலைவில் 
உணவை வைப்பதே அரசின் கடமை 
பட்டினிச் சாவுகளைப் 
பட்டினால் போர்த்தாதீர் ; 
அடிப்படைக் கடமையை அழகாய்ச்  செய்தவர்க்கு 
அளிக்கலாம் இன்னுமோர் வாய்ப்பு 
அதே நேரம் அரசிற்கோர் அறிவுரை 
ஏழையை ஏழையாகவே வைக்காதீர் 
ஏனெனில் வளர்ச்சிதான் உயிர்மையின்  அறிகுறி 
தேக்கம் அடுத்த 
தேர்தலுக்கு உதவாது  

வன்முறையில் ஈடு படுவது கன்னடர்களோ தமிழர்களோ அல்ல. அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் அயோக்கிய அரசியல்வாதிகளின் கைக்கூலிகளே.  அவர்களுக்கு மொழியும் தேசமும் ஒன்றுமில்லை. முகமற்ற அடையாளமற்ற விலங்குகள் அவர்கள். எனவே முக நூலில் வெறியேற்றும் பதிவுகளை இடாதீர்கள்.   பகைமை வளர்ப்பது நமக்கு நல்லதல்ல. சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் சகோதரனோ என் மகனோ அண்டை மாநிலத்திற்கு வேலை தேடிச்  செல்லும் வாய்ப்பை நாம்  இழக்கிறோம். வன்முறையில் ஈடுபடும் குண்டர்களுக்கும் அவர்களை ஏவி விடும் அரசியல்வாதிகளுக்கும் எந்த நஷ்டமும் இல்லை. கோபமான பதிவுகளை உடனே நிறுத்துங்கள். 

பாரினிலே பாங்கான தலைவர்தம் கதையுரைத்தீர் 
காரிருள் சூழ் கார்ப்பொரேட்டின்  உண்மை சொன்னேன்  
உலகம் உய்ய வந்த பெருமக்கள் குறித்தல்ல 
நலமாய் வாழ வழி தேடும் பணி மக்கள் துன்பமிது 
நாடியே நலம்  உரைத்தால் கொள்வோர் இங்கில்லை 
ஓடிச் சென்று நடை பாவாடை விரிப்பவர்க்கே காலமிது 
நம் பணியை நாம் செய்தோம் என்றளவே  அமைதி வரும் 
உம்மளவில் அனுபவம் என்? உரைத்திட நன்றாகும் 



உள்ளம் உரைப்பதை உதடுகள் உரைக்குமாயின்
உள்ள படியே உமக்கு உற்றார் யாருமிலர் 
பாங்காய் லாபம் பலமுறை  கணக்கிட்டு
ஆங்கே வாழ்வியலை வணிகவியலாக்கும்
அயிரை இட்டு வரால் வாங்கும் மனிதர்கள்
பயிரை மேய்ந்து வயிறு வளர்க்கும் வேலிகள்
இவர்களிடையே உண்மை விற்றால் கொள்வாரில்லை
தவறே ஆயினும் கூறுதற்கு  மௌனமே சிறந்த மொழி
கசக்கின்ற உண்மை இங்கு விலை போவதில்லை 
பசப்புகிற மாந்தர்க்கே இங்கு அரசவை  அங்கீகாரம்
தேன்  போன்ற பொய் விரும்பும் மூடர் தம் நடுவே
ஏன் என்ற கேள்விகள் எடுபடுவதில்லை
உம் முன்னே கடந்து செல்லும் காட்சியைக் கண்ட படி
சும்மா இருப்பீர்; தண்ணீரில் தாமரையாய் 

அருமையான பதிவு. பிராமணனை   எதிர்க்க நாயர்களும் தெலுங்கர்களும் கையிலெடுத்த ஆயுதம்தான்  திராவிடம். ஜெய மோகனின் கட்டுரையைப்  படியுங்கள்.  எனக்கு எல்லோரும்  இந்தியர். தெலுங்கு  கன்னட எதிர்ப்பொன்றுமில்லை.  ஆனால்   திராவிடம் உருவான கதை மறைக்கப்பட்டுத்  திரிக்கப் பட்டுத்  தமிழர் பிராம்மணர் பிரச்னையாக்கப் பட்டது.  பிராமணர்கள்  தமிழர்களே அல்ல என்ற தோற்றம் உருவாக்கப் பட்டது.  தனக்குத்  தானே தமிழினத் தலைவர் என்கிற பட்டத்தைச் சூட்டிக்கொண்டு அதே சமயம் தமிழ் காட்டு மிராண்டி பாஷை தமிழன் காட்டு  மிராண்டி என்று சொன்ன ஈ வே ரா வைப்  பகுத்தறிவுப் பகலவன் என்றும் தந்தை பெரியார் என்றும் சொன்னவர்கள்  பின்னால் தமிழகம் திரண்டு நின்றது ஒரு சோகக் கதை. ஆராய்கின்ற கூட்டம் அரசியலை விட்டு விலகி நிற்க அப்பாவியாய்  ஒரு கூட்டம் இவர்களைக்  கண் மூடித்தனமாய் நம்பியது. வளர்த்து விட்டது.

ப்ராம்மண்யம்
ஒருவர் முகநூலில்  அந்தணர்கள் கடந்த ஐம்பதாண்டுகளில் பட்ட கஷ்டத்தைச் சொல்லியிருந்தார்அதோடு இன்றைய அந்தணர்கள் வாழ்க்கை முறை பற்றியும்  அங்கலாய்த்திருந்தார்.  ப்ராம்மண்யம் என்பது வெறும் அனுஷ்டானமல்ல . சந்த்யாவந்தனம்  வேத அத்யயனம் மற்றும்  அந்தணர் குடியில் பிறத்தல் இவை  ஒருவரை அந்தணராக்குவதில்லைஆசையும் கர்வமும் தோன்றும்போதே ப்ராம்மண்யம் மறைந்து விடுகிறதுஅது  பணச் செருக்கோ படிப்புச் செருக்கோ ஏதாயினும் சாத்விகத்தை அழித்து  விடுகிறதுசாத்விகமில்லாதவனை அந்தணன் என்று கொள்வது  எங்ஙனம்?    நிலவுடைமை வந்த போழ்திலேயே அந்தணம் இல்லாது போயிற்றுஇது நேற்று வந்ததல்லதுரோணன் காலத்திலேயே வந்து விட்டதுகுழந்தைக்குப் பால் கேட்காமல் பாதி ராஜ்ஜியம் கேட்டு அவமானப்பட்டுப்  பழி வாங்கி வில் வித்தையைப் பகட்டுக்காக அரண்மனைக்கு விற்ற போதே தொடங்கியது.
 ப்ராம்மண்யம் பிறப்பால் வருவதல்லஅந்தண குலத்தில் உதித்ததாலேயே ஒருவனைக்  கொண்டாட வேண்டிய அவசியமில்லை.  இராவணன் பிறப்பால் அந்தணன்.  அவனை ராமாயணம் இகழ்கிறது.  அந்தணராகிய பரசு ராமன்  அரசன் ராமனிடம் தோற்றதாகத்தான் ராமாயணம் சொல்கிறது . கௌசிகன் என்கிற பிராம்மணன்   ஒரு மாமிசம் விற்கிறவனிடம்  சென்று வாழும் வழி அறிந்த கதையை மஹாபாரதம் உரைக்கிறது..  பிறப்பால் அந்தணரல்லாத விச்வாமித்ரர்  அந்தணராக அங்கீகரிக்கப் பட்டார்.    பரசுராமன் அந்தணர் குலத்தில் உதித்தாலும் கோபத்தை வெல்ல இயலாமையால்  அந்தணர் ஆக  மாட்டார்அரசராகிய ராமரிடம் தோற்றார்பீஷ்மரிடமும்தான்.
 தன்னைக் கொல்ல  வந்த விஸ்வாமித்ரரைக் கூட மன்னித்துப் பெருந்தன்மையோடு அவரை அங்கீகரித்தார் வசிஷ்டர்தற்காப்புக்காகத்  தன்  சக்தியை உபயோகித்தாரே தவிர விஸ்வாமித்ரரைத்  தாக்கவில்லை;  எனவே அவர் ராமருக்கு குருவானார் .
 இப்படி நம் புராணங்களும் இதிகாசங்களும் மிகத்தெளிவாக நடத்தையையே வலியுறுத்துகின்றன.
ஜாதியை உயர்வு சொல்லவில்லை;   நம் புராணங்களையும் இதிஹாசங்களையும் சற்று ஆழ்ந்து படித்தால் ஒருவரின் மனப்பான்மையும் செயலுமே அவரை உயர்த்தியுள்ளன என்பது புரியும்
 அந்தணர்  என்போர் அறவோர்அறவழியில் நிற்கிற யாரும் அந்தணரேஅந்தணன் என்பவன் சுயநலமற்றவன்கோபமற்றவன்செருக்கற்றவன்எளிமையான வாழ்க்கை வாழ்பவன்உணவு அவனுக்கு உயிர் வாழ்தற்  பொருட்டேகலவி வம்சம் தொடர்வதற்கு மட்டுமே;  அவன் வாழ்க்கை  இறை தேடுதல் மட்டுமேஞானம் இறைத்தல் மட்டுமேஅப்படித் தவம் செய்து பெற்ற ஞானத்தை மற்றவர்க்கு உரைத்தலே  அவன் வேலைஇப்படி யார் வாழினும் அவர் அந்தணரேஇப்படி வாழாமல் இன்னாருக்கு நான் பிறந்தததாலேயே  எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்த போது,  தன்  தகுதிக்கு மீறி ஆசைப் பட்ட போதுதான்  அந்தணம் என்பது வாழ்க்கை முறையாக இல்லாமல் சாதியாக மாறியது.
 காஞ்சி மஹான்  உரைத்தபடி ப்ராம்மண்யம்  என்பது ஒரு தியாகம்வலிந்து ஏற்றுக்கொண்ட எளிமை;
 இந்நோக்கில் மஹாபாரதத்தில்  பீஷ்மர்  அந்தணர்.   மறைந்த திரு அப்துல் கலாம் அவர்கள் அந்தணர். . இது ஜாதி இல்லை. ஏனென்றால் அந்தணம்  என்பது ஜாதி இல்லை. . நல்லொழுக்கம்;  நேர்மை;  சாத்விகம்.

மணியரசன் செந்தமிழனின் ஒரு பதிவு என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
இவர் மோடியை ஹிந்துத்வ வெறியர் என்கிறார். ஆனால் இவரே சிவ வாக்கியர் முதலான சித்தர்களைக் கொண்டாடுகிறார். சிவனைத் தமது இறை என்கிறார்.  அப்படியானால் சிவன் இந்துக்  கடவுள் இல்லையா?

நான் செந்தமிழனை மிகவும் மதிக்கிறேன். அவரது  விவசாயம் பற்றிய கருத்துக்களோடு உடன் படுகிறேன். இயற்கை வேளாண்மையே மீட்சிக்கு வழி என்பதை அப்படியே ஒப்புக் கொள்கிறேன்.
ஆனால் அவர் பதிவுகளில் ஒரு பார்ப்பன வெறுப்பைப் பார்க்கிறேன். ஏதோ  இன்றைய  எல்லாத்  தவறுகட்கும் பார்ப்பனர்களே காரணம் என்பது போல் பதிவது வெறுப்பை வளர்ப்பதாகும். .

இதே போல் நம்மூரில்  பல வாதங்கள் உள்ளன. பா  ஜ  க பிராமணர்களின் கட்சி என்று ஒரு வாதம். பிராம்மணர்களால்தான்   பாஜக ஆட்சிக்கு வந்தது என்று ஒரு வாதம். பிராம்மணர்கள் 3% என்பது   ஒரு புள்ளி விவரம். அப்படியானால் 3% ஆட்கள் வாக்களித்தா பாஜக ஆட்சிக்கு வந்தது? 

இட ஒதுக்கீடு வந்தது முதல் பிராம்மணர்கள் அயல் நாட்டு வாய்ப்புகளைத் தேடத்  தொடங்கிப் புலம் பெயரத்  தொடங்கினார்கள். இன்று இருப்பது பெரும்பாலும் வயதானவர்களும் அயல் நாட்டில் வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களும் மட்டுமே.  இன்று அரசியலில் தீவிரமாக ஈடுபடும் ப்ராம்மணர்கள் எத்தனை பேர்? அவர்களாலா பா ஜ  க ஆட்சியில் அமர்ந்தது? 

ஜல்லிக்கட்டு ஒரு சிறிய விஷயம் என்றும்  அதற்கு இவ்வளவு போராட்டம் அவசியமில்லை என்றும் சில குரல்கள்  எழுந்தன. ஜல்லிக்கட்டு ஒரு என்பது ஒரு வாசல் திறந்தது போல்தான். கர்நாடகம் தண்ணீர் தர மறுத்ததும் உச்ச நீதி மன்ற உத்தரவை மீறியதும் மத்திய அரசு  கண்டு கொள்ளாமல் இருந்ததோடு மட்டுமின்றி கர்நாடகாவிற்குத்  துணை நின்றதும்  விவசாயிகள் தொடர்ந்து மரணித்து வருவதும் இப்படிப் பல விஷயங்கள் பொங்கிக்கொண்டே இருந்தன.

இது மட்டுமல்ல. 2015  டிசம்பரில் வெள்ளம் வந்த போதே இளைஞர்கள் அரசை நம்பிப் பயனில்லை என்று களத்தில்  இறங்கி விட்டனர். உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த  நிகழ்வு அது.  . அது ஒரு எழுச்சியின் ஆரம்பம். எங்களுக்குக் கை கொடுக்க உங்களால் இயலாவிடின் நாங்களே எங்களைப் பார்த்துக் கொள்வோம் என்ற எச்சரிக்கைதான் டிசம்பர் 2015 ல் இளைஞர்களின் களமிறங்கல். அரசு அப்போதே விழிப்படைந்திருக்க  வேண்டும். 

அதே செய்தி இன்னும் துல்லியமாகச் சொல்லப்பட்டிருக்கிறது மெரினாவில், அரசியல்வாதிகளைப் புறக்கணித்ததன் மூலமாக.

இந்த இளைஞர்கள் எனக்குப் பெரும் நம்பிக்கை தருகிறார்கள்.அன்று அந்த இருட்டில் ஒளிர்ந்த  கை பேசி விளக்குகளின் மத்தியில் ஒரு  ஆதவன் உண்டு ; எங்களுக்கு விடியல் நம்பிக்கை தந்த ஒளி. இந்நாடு பொன்னாடாகும். இது சத்தியம்.

ஐயன்


உடையார் கங்கை கொண்ட சோழன் இரண்டும் படித்து முடித்து விட்டேன். கல்கி, ஜெகசிற்பியன், அகிலன், நா பா ,  சாண்டில்யன், சுஜாதா ,  ஏன் மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" என்று பலருடைய சரித்திர நாவல்களைப்  படித்திருக்கிறேன். இவ்வளவு ஆழமாக அன்றைய  சமூகவியல்  பார்வையோடு ஒரு சரித்திர நாவல் படித்ததே இல்லை.  அன்று வாழ்ந்த உணர்வைக் கொடுக்கிறது உங்கள் எழுத்து. 

என்னை மிகவும் கவர்ந்த, பாதித்த,  சிந்திக்க வைத்தவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இக்கடிதம்.  இப்படிப் பகிர முடிவது உங்களோடு நேரடித் தொடர்பு கொள்ளும் உரிமை என் பாக்கியம். இதை எனக்களித்த என் வழிகாட்டியும்   எனதருமை ஸ்நேகிதியும் என் மனைவியுமான ஷீலாவுக்கு என் நன்றிகள். 

முதலில் பிரமிக்க வைப்பது ஆழ்ந்த  புள்ளி விவரங்கள். அன்றைய குறியீடுகள். சம்பவங்கள் மட்டுமே கற்பனை. ஆனால் கற்பனை  எது நிஜ நிகழ்வு எது என்பது தெரியாமல் ஒன்றன் மீது ஒன்றாய்  அடுக்கிய கதைக் கோவை,  கிட்டத்தட்ட இன்னொரு பெரிய கோவில் கட்டுமானம். 
எத்தனை  வருட உழைப்பு என்ன ஒரு  உறுதி எவ்வளவு அர்ப்பணிப்பு என்கிற திகைப்பு. 

மனிதர்களை மனிதர்களாய்ச் சித்திரித்திருக்கிறீர்கள். வெறுமனே ஒரு ஹீரோ என்பதாக இல்லாமல் திரையில் காணுகிற பிம்பங்களாக இல்லாமல் பொறாமை கோ பம் அழுகை  பக்தி சந்தேகம் ஊசலாட்டம் அவநம்பிக்கை என்று  அவர்களோடு வாழ்ந்த  உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். அரையன் ராஜ ராஜனும் அருண் மொழிப பட்டனும் மோதும் இடங்கள் அற்புதமாய் வந்திருக்கின்றன.  வெற்றி என்பதோடு நின்று விடுவதில்லை.   வெற்றியை சட்டென மறந்து  அடுத்த செயலுக்குப்  போக ஞானிகளாலும் கர்ம யோகிகளாலும் தான் முடியும்.  பெற்ற  வெற்றியில்  என் பங்கு எவ்வளவு என்பதே சாதாரண மனிதர்களின் மனப்பாங்கு. 

என்னைக் கொண்டாடு. அதென்ன உன் ஆசை மனைவியை முன்னிறுத்தி விட்டாய்  அப்போது இதன்  காரணம் நானில்லையா  சரியான சமயத்தில்  நான் போயிருக்கா விட்டால் சற்று தாமதித்திருந்தால் அருண் மொழிப பட்டன் இல்லாமல் அல்லவா  போயிருப்பான் போரின் முடிவே மாறியிருக்காதா  என்ற அரையன்  ராஜராஜன் குமுறல். நானல்லவோ கங்கை கொண்டவன் என்னைக் கொண்டு காரியம் சாதித்து விட்டு கங்கை கொண்டதாக நீ பேர் சூட்டிக் கொள்கிறாயே  என்ன அக்கிரமம் இது என்னும் கொதிப்பு ; நானல்லவோ அரசனாய்க் கொண்டாடப் பட வேண்டியவன் என்கிற பேராசை. இனி உனக்கு அடங்கி இருக்க முடியாது எனும் மூர்க்கம். 

மிகப் பெரிய வீரர்களை வீழ்த்துவது அவர்கள் பெற்ற  வெற்றியே;  எதிரிகளல்ல என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். என்னைப்  பொறுத்த வரை வெற்றி பெற விரும்புபவர்கள்  மட்டுமல்ல வெற்றி பெற்றவர்களும் படிக்க வேண்டிய  வேதம் இந்த இரு புத்தகங்களும். 

போர்கள் மட்டுமல்ல கோவில் கட்டலிலும் அரசன் சந்திக்க நேருகின்ற   சமூகப் பிரச்னைகளை  நீங்கள் எழுதியிருப்பது வியக்க வைக்கிறது. எவ்வளவு தீர்க்கமான  பார்வை. 

தந்திரம் கொள்ளின் அந்தணம் பிழைபடும்  என்பது என் எண்ணம்.  அந்தணம் என்பது அமைதி;  இறை தேடல் . ஞானம் இறைத்தல் . ஊருக்கு நன்மை உரைத்தல்;   தன்னுள் நன்மையின்றி ஊருக்கு எப்படி  உரைக்க முடியும்.  பேராசையும் கர்வமும் தந்திரமுமாய்த் தானிருப்பின் இறைமை எங்கே வரும்.  பரமாச்சாரியார் சொன்னது போல் ப்ராம்மண்யம்  என்பது வலிந்து ஏற்றுக்  கொள்ளும்  வறுமை; ஒரு தியாகம். ; அதைச் செய்யாமல் பிறப்பால் உயர்வு கொண்டாடுவது அயோக்கியத்தனம்; மிக அழகாய்ச் சொல்லியிருக்கிறீர் ஐயன். 

ராஜேந்திரரின் அந்தண வெறுப்பு இன்றைய நிலையின் சாயல். ஆனால் அதற்கு முழுப் பொறுப்பு அன்றைய அந்தணர்களின் நடவடிக்கை என்பதே உண்மை.. 

எவ்வளவுதான் க்ஷத்ரியனைப் போல் வாளேந்திப் போரிட்டாலும் உடன்  பிறந்த  குணங்களை மாற்றுவது அரிது என்பதற்கு அருண் மொழிப பட்டன் ஒரு உதாரணம். அதை ராஜேந்திரர் வாய் வழி அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். "அருண்மொழி மூர்க்கமாய்த் தாக்குவான்; முடமாக்குவான்;  ஆனால் கொல்ல  மாட்டான் ".

எல்லாவற்றையும் விட கதை  சொல்லும் போக்கில் கூடவே வருகிற இறையுணர்வு; அற்புதம்;  எல்லோர் வாயிலாகவும் சொல்கிறீர்கள்; 

எப்படிப்பட்ட பேரரசனும் ஒரு நாள் இல்லாமல் போவான்; வயதாகும் கண் மங்கும்; நினைவு தவறும் . மரணம் எதிரே நிற்கும் போது அட்டகாசமாய்ப் பெற்ற  வெற்றிகள் காணாமல் போகும்; ராஜேந்திரருக்கும் இது நிகழ்கிறது; வெற்றியைப் பின் தள்ளி   வெட்டிய ஆட்கள் நினைவுக்கு வருகிறார்கள்;  சாதனையாய் நினைத்தவை பாபங்களாய்ப் பயமுறுத்துகின்றன;  படிக்கும் போது ஆடிப் போயிற்று; 

மரணம் என்கிற உண்மை சொல்ல இரண்டு அரசர்களின் இறுதியையும் அழகாய்ப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

உங்கள் எழுத்தைப் பாராட்ட நான் யார். இது ஒரு பகிரல்; ஒரு நன்றி உரை அவ்வளவே .

இறுதியாய் ஒரு வார்த்தை.

என்னதான் ராஜேந்திரர் வெற்றியைக் கொண்டாடினாலும் என் மனம் ராஜ ராஜர் பக்கம் தான். இதை வைத்து என் குணம் என்ன என்று  சொல்லுங்கள் ஐயன். 

அன்பு கலந்த வணக்கங்களுடன் 

ஸ்ரீநிவாஸன்