Tuesday, March 15, 2022

 தாரமே தாயாய் இருந்திடில் வாழ்வில்

பாரமொன்றில்லை அறிந்தவர் அறிவர்

மூதுரை செப்பிய ஔவையின் ஞானம்

யாதுரை செய்யினும் முகிழ்த்திடும் முறுவல்

தீதொன்றிலாத அருள் நிறைச் சொற்கள்

பேதங்கள் இன்றியே பொங்கிடும் அன்பு

நான்முகன் தேவி கலைமகள் இவளோ

நான்மறை நாயகன் மார்புறை திருவோ

நான் முன் செய்த நல்வினைப் பயனோ

மானவள் எனக்குத் துணையென வந்தாள்

இல்வாழ்வென்பது நல்வாழ்வானது

இல்லாததொன்றும் இல்லையென்றானது

பாங்காய் இகத்தில் வாழ்கிறோம் கண்ணா!

நீங்கிடும்போதும் பிரியாதருள்வாய்!