மாசில்லாத் தமிழ் கூறும் மாண்பு மிக்கோர் சபையினிலே
ஈசனேதான் ஆனாலும் குற்றத்தை இடித்துரைக்கும்
நக்கீரன் வழி வந்தோர் இருப்பதுவும் ஓர் சிறப்பே
தக்கதோர் வழியாமே நம் தமிழை நாம் வளர்க்க
அறுபதைக் கடந்தாலும் தாடியது நரைத்தாலும்
கற்பதை நிறுத்தவில்லை
கல்வியது தொடர்கிறது
வயதறியாத் தமிழன்னை சாந்நித்யம் என் முன்னே
தயங்குகிற பாலகனாய்த் தவழ்கின்றேன் அவள் மடியில்
ஆத்திரங்கள் ஒன்றுமிரா; தயங்காமல் தவறுரைப்பீர்
நாத்தனார் மகனெனவே சாத்திரங்கள் பார்க்காதீர்
கண்ணனைப் பாடுமின் கண்ணனைப் பாடுமின்
நுண்ணிய பொருளினுள் நுண்மையாய் நிற்பவன்
எண்ணத்தில் உயர்வதைத் தருமமாய்ச் சொன்னவன்
கிண்ணத்தில் சோறிடின் குழந்தையாய் வருபவன்
திண்ணமாய் யோகத்தின் நெறியதைத் தந்தவன்
வண்ணமாய் அறந்தனைப் புரக்கவே பிறப்பவன்
அண்மையில் இருந்தும் காணுதற் கரியவன்
நண்பனாய் இருந்து அறிவுரை சொல்பவன்
தண்மையில் நிலவதன் ஒளிபோல் குளிர்பவன்
வண்மையில் தனக்கு நிக ரில்லாதவன்
கண்ணனைப் பாடுமின் கண்ணனைப் பாடுமின்
தூணிலும் துரும்பிலும் இருப்பதோர் சக்தி
ஆணையும் பெண்ணையும் படைத்ததோர் சக்தி
காணுதற் கரிதாம் கண்டவர் வசமாம்
பேணுவது அதுவே பிறப்பிப் பததுவே
கோணாத கோலும் பிழைக்கின்ற போது
நாணாது மறத்தை அழிப்பது மதுவே
ஆண்டவன் என்றும் அருள்பவன் என்றும்
ஈண்டிங்கு பலதாம் பெயர் கொண்ட ழைப்பார்
மீண்டும் பிறப்பு மீண்டும் இறப்பென
யாண்டும் சக்கரம் சுழல்வது அதனால்
காண்மின் காண்மின் அதனின் ஓர் துமியை
மாண்பினை வியந்தோம் சிறிதாய் உணர்ந்தோம்


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home