Saturday, October 5, 2019





கண்ணன்  தந்த  கொடை


ஆடவர்    என்றும்  மனதுக்குள்ளே  தாய்மையின்  தேடல்  உள்ளவரே
தேடியதொன்றே  எதிரில்  நின்றது  அன்றொரு  நாள்  என்  வீட்டருகே

முந்தி  என்னை  உண்டது  உந்தன்     கருணை  வழியும்  கண் மலரே
தந்தேன்  என்னை  வீழ்ந்தேன்  நானே  முதிராப்  பெண்மை  அழகினிலே

வயதும்  சென்றது  இளமை  போனது  ஆயினும்  காதல்  குறையவில்லை
வியந்து  நின்றேன்  ஒவ்வொரு  நாளும்  புதிதாய்  உன்னை  உணர்கையிலே

காதல் என்பதன்  காலம்  என்பது  கடலும்   வானும்  உள்ளவரை
காதல்  கொண்டோர்  கவிதை  சொல்வார்  ஆறு  நொடிக்குள்  நூறு முறை

வலியும்  வந்தது  வேதனை  வந்தது   வாழ்வின்  பாதை  வளைவினிலே
மலிந்து  வந்த  துன்பம்  யாவும்  புகையாய்  மறைந்ததுன்  அன்பினிலே

பெண்மை என்னும் பெருங்கருணைக்கு நம்மை நாமே கொடுத்து விடின்
மண்ணில் காண்பீர் சொர்க்கம் தன்னை உண்மை இது என் அனுபவமே 

என்னை முழுதாய்  அறிந்தவள் நீயே மீண்டும் என்னை ஈன்றெடுத்தாய்
பொன்னென என்னைப் போற்றுகின்றாயே; அன்னையின் அருளாய் வந்து நின்றாய்

அன்பு  என்னும் அமுதம்  நிறைந்து  இல்லம் ஆலயம் ஆனதனால் 
நன்னீர்  தேடி  அலையும்  உயிரென  மக்கள்  நாடி  வந்தனரே

கண்ணா  நின்றன்   கருணை வெள்ளம்  கனிந்து அருளிய நலமிவளே
எண்ணம் குவித்து இறைஞ்சி  நின்றேன்   என்றும் பிரியா வரமருளே

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home