ப்ராம்மண்யம்
ஒருவர் முகநூலில் அந்தணர்கள் கடந்த ஐம்பதாண்டுகளில் பட்ட கஷ்டத்தைச் சொல்லியிருந்தார். அதோடு இன்றைய அந்தணர்கள் வாழ்க்கை முறை பற்றியும் அங்கலாய்த்திருந்தார். ப்ராம்மண்யம் என்பது வெறும் அனுஷ்டானமல்ல . சந்த்யாவந்தனம் வேத அத்யயனம் மற்றும் அந்தணர் குடியில் பிறத்தல் இவை ஒருவரை அந்தணராக்குவதில்லை. ஆசையும் கர்வமும் தோன்றும்போதே ப்ராம்மண்யம் மறைந்து விடுகிறது. அது பணச் செருக்கோ படிப்புச் செருக்கோ ஏதாயினும் சாத்விகத்தை அழித்து விடுகிறது. சாத்விகமில்லாதவனை அந்தணன் என்று கொள்வது எங்ஙனம்? நிலவுடைமை வந்த போழ்திலேயே அந்தணம் இல்லாது போயிற்று. இது நேற்று வந்ததல்ல. துரோணன் காலத்திலேயே வந்து விட்டது. குழந்தைக்குப் பால் கேட்காமல் பாதி ராஜ்ஜியம் கேட்டு அவமானப்பட்டுப் பழி வாங்கி வில் வித்தையைப் பகட்டுக்காக அரண்மனைக்கு விற்ற போதே தொடங்கியது.
ப்ராம்மண்யம் பிறப்பால் வருவதல்ல. அந்தண குலத்தில் உதித்ததாலேயே ஒருவனைக் கொண்டாட வேண்டிய அவசியமில்லை. இராவணன் பிறப்பால் அந்தணன். அவனை ராமாயணம் இகழ்கிறது. அந்தணராகிய பரசு ராமன் அரசன் ராமனிடம் தோற்றதாகத்தான் ராமாயணம் சொல்கிறது . கௌசிகன் என்கிற பிராம்மணன் ஒரு மாமிசம் விற்கிறவனிடம் சென்று வாழும் வழி அறிந்த கதையை மஹாபாரதம் உரைக்கிறது.. பிறப்பால் அந்தணரல்லாத விச்வாமித்ரர் அந்தணராக அங்கீகரிக்கப் பட்டார். பரசுராமன் அந்தணர் குலத்தில் உதித்தாலும் கோபத்தை வெல்ல இயலாமையால் அந்தணர் ஆக மாட்டார்; அரசராகிய ராமரிடம் தோற்றார். பீஷ்மரிடமும்தான்.
தன்னைக் கொல்ல வந்த விஸ்வாமித்ரரைக் கூட மன்னித்துப் பெருந்தன்மையோடு அவரை அங்கீகரித்தார் வசிஷ்டர்; தற்காப்புக்காகத் தன் சக்தியை உபயோகித்தாரே தவிர விஸ்வாமித்ரரைத் தாக்கவில்லை; எனவே அவர் ராமருக்கு குருவானார் .
இப்படி நம் புராணங்களும் இதிகாசங்களும் மிகத்தெளிவாக நடத்தையையே வலியுறுத்துகின்றன.
ஜாதியை உயர்வு சொல்லவில்லை; நம் புராணங்களையும் இதிஹாசங்களையும் சற்று ஆழ்ந்து படித்தால் ஒருவரின் மனப்பான்மையும் செயலுமே அவரை உயர்த்தியுள்ளன என்பது புரியும்.
அந்தணர் என்போர் அறவோர். அறவழியில் நிற்கிற யாரும் அந்தணரே. அந்தணன் என்பவன் சுயநலமற்றவன்; கோபமற்றவன்; செருக்கற்றவன்; எளிமையான வாழ்க்கை வாழ்பவன்; உணவு அவனுக்கு உயிர் வாழ்தற் பொருட்டே; கலவி வம்சம் தொடர்வதற்கு மட்டுமே; அவன் வாழ்க்கை இறை தேடுதல் மட்டுமே; ஞானம் இறைத்தல் மட்டுமே; அப்படித் தவம் செய்து பெற்ற ஞானத்தை மற்றவர்க்கு உரைத்தலே அவன் வேலை. இப்படி யார் வாழினும் அவர் அந்தணரே; இப்படி வாழாமல் இன்னாருக்கு நான் பிறந்தததாலேயே எனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்த போது, தன் தகுதிக்கு மீறி ஆசைப் பட்ட போதுதான் அந்தணம் என்பது வாழ்க்கை முறையாக இல்லாமல் சாதியாக மாறியது.
காஞ்சி மஹான் உரைத்தபடி ப்ராம்மண்யம் என்பது ஒரு தியாகம்; வலிந்து ஏற்றுக்கொண்ட எளிமை;
இந்நோக்கில் மஹாபாரதத்தில் பீஷ்மர் அந்தணர். மறைந்த திரு அப்துல் கலாம் அவர்கள் அந்தணர். . இது ஜாதி இல்லை. ஏனென்றால் அந்தணம் என்பது ஜாதி இல்லை. . நல்லொழுக்கம்; நேர்மை; சாத்விகம்.


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home