Thursday, June 28, 2018

கோவிலூர் பதிகம்

1.                          கார் வண்ண  மேனியாய் கனிவான தேவியர்   சூழ 
நேர் நின்ற கண்ணனே ! கோவிலூர் உறை நாரண !
பதினாறில் நினைப்பாடும் சிந்தை  தாராமல் ; 
பத்தாறு பிராயத்தில் நாவிலே வந்து நின்றாய்
இனி உள்ள காலம் நின்னை நினைந்துருகி  
இனிய தமிழால் உளம் நிறைந்து உனைப் பாட  
முற்றாய்ச் சூழ்ந்திருக்கும் பண்டை வல் வினையும்
பற்றும் அறுத்து  என்னை உய்விக்க வாராயோ 
கடிதான வாழ்விதிலே மாறி  வரும் இருமை மாற்ற 
முடிவில்லா உன் விளையாட்டை நிறுத்தி நீ நேரில் வா  

2.                         நின்னை அடுத்திலேன்    நல்  எண்ணங்கள்  வளர்த்திலேன்
முன்னைக் கருமங்கள்  தொலைக்க  முயன்றிலேன்
பின்னைப்  பிறவிகள் ஓர்த்தே  தீவினை   நிறுத்திலேன்
என்னையே எண்ணி வாழும் இக் கீழ்மை சற்று  மாற்றி
உன்னையே சரண் புகுந்து உன் கழல் பற்றி வீழும்
நன்மை என்னில்  வாராதோ மூவுலகு அளந்த பெரும!
சென்னி உன் பாதம் வைத்தேன் சீராக என்னை ஆள்வாய் 
பன்னிப்  புனைந்த  பாமாலை பரிவோடு ஏற்றுக் கொள்வாய்
பின்னிப் பிணைந்த இருவினையும் மாற்றி என்னை
உன்னிலே சேர்த்தருள்வாய் கோவிலூர் வாழும் கோவே

3.                         ஊனுக்குள் உயிரை வைத்து  உடலுக்கோர் பெயரை வைத்தான்
நானென்ற அகந்தை தன்னை அகத்திலே மறைத்து வைத்தான்
மானிடர் அறிவை என்றும் மாயையால் மூடி வைத்தான்
தான் நேரில் நின்ற பொழுதும் காணாமல் செய்து வைத்தான்
குருடராய் மாந்தர் இங்கே மடமைகள் பலவும் செய்து
இருட்டிலே கிடந்துழன்று ஏங்கியே அழுத போழ்தில்
எட்டிய சிலரை மட்டும் ஒளி காட்டி அழைத்துச் சென்றான்
மட்டிலாக்  கருணை கொண்ட மாயனுக்கிது அழகோ
நானிலம் மாலிருஞ்சோலை  வானும் கடலும் அவன் வண்ணம்
      ஏனிருப்பதின்னும் இங்கே வழி காட்ட வா கோவிலூர்க் கோவே  

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home