என்னவளுக்கு ஒரு சிறு நன்றி நவிலல் இக் கவிதை முயற்சி
சேரநாட்டின் தேவதை தொண்டை நாட்டி லுதித்தெனைச்
சேர வேண்டி வந்தனள் அண்டை வீட்டு அழகியாய்
கோதையொத்த வயதினள் தென்றலாய் மிதந்தனள்
காதையாகி நீண்டதே அன்றுதித்த காதலே
அறுபதாய போதிலும் ஆர்க்குமே என் மனம்
மறுத்திடாமல் அன்று நீ காதல் சொன்ன தெண்ணியே
நிறைத்தனை எம்மை நீ அன்பெனும் அமுதினால்
இறைத்தன்மை என்பதை உன்னிலே காட்டினை
வாழ்வெனும் நதியிலே வளைவுகள் வந்தன
தாழ்விலும் சோர்வுறாது தாங்கியே பிடித்தனை
என்னவர் உன்னவர் வேறுபா டின்றியே
தன்னிகரில்லா உந்தன் அன்பினால் ஆண்டனை
என் பாதை உன் பாதை என் எண்ணம் உன் எண்ணம்
என் விருப்பே உன் விருப்பு என் முடிவே உன் முடிவு
அன்பையே பெண்ணாக்கி என் வாழ்வில் ஒளி கூட்ட
முன் செய்த நல் வினையால் நான் பெற்ற வரமே
பாங்காக வாழ்கின்றோம் ஈருடலாய் ஓருயிராய்
நீங்காமல் இறை சேர குருவருள் நிறைகவே


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home