Tuesday, August 7, 2012

என் கவிதைகள்:


இளமை:

ஐந்திலே ஓடியதும் ஆடியதுமொரு புகை போல் நினைவு; பத்து
ஐந்திலே பள்ளி சென்றதும் அறிவு விழித்ததும் – இருபத்து
ஐந்திலே உயிர்க்காதலும் உயர் கல்வியும் எதிரெதிராய் நின்றதும் – முப்பத்து
ஐந்திலே மூன்று ரத்தினங்க்ளுடன் வாழ்க்கைப் பெருங்கடல்; நாற்பத்து
ஐந்திலே திரவியம் தேடித் திரை கடலோட்டம் – ஐம்பத்து
ஐந்திலே இள்மையின் பொன்னந்தி மாலை ; எதிர் நிற்கும் பொறுப்புகள்எந்த
ஐந்திலும் என் மனதின் துள்ளலில் இருபத்தைந்தே 

கர்வம்:

இலக்கியம் அறிந்தவன் கவிதை செய்பவன்
உலகம் தெரிந்தவன் விவேகம் உள்ளவன்
பலரும் வந்து ஆலோசனை லேட்கும் அறிவு
நலத் திட்பம் வாய்ந்தவன்; நயமாய் உரைத்திடும்
சொலல் வல்லன்; அறியாததொன்றில்லை என என்னைப்
பலபடி வியந்தவாறு வான் நோக்கி நடந்தேன்;
பலரும் நகைக்கக் கீழே விழுந்தேன் சிறு கல் அறியாமல்

கடல் குளியல்:

என் மீது பாய்ந்து என்னை வீழ்த்தி முயங்கிச்
சட்டென்று பின் வாங்கி எதிர்பாராமல் மீண்டும்
மதர்த்தெழுந்து என் மீது படரும்
கடல் நிச்சயம் பெண்தான்

நான் :
நடக்க நடக்கத் தெரிந்தது நான் நடந்த் தூரம் குறைவெனறு
படிக்கப் படிக்கத் தெரிந்தது நான் அறிந்தது மிகக் குறைவென்று
கேள்விகளாய் என்னுள் மூழ்கி விடை கண்டு துடித்த வினாடி
என்னுள் என்னருகே நான் 

பாம்பதனைப் போலவே நாவில் விடமென்றுரைத்திட்டாள்
சோம்புதலின்றியே யாண்டும் அன்பு செய்யும் என்னை – பல்லுயிர்
ஓம்புதலின்றி வேறொன்றறியேன் என் மனையாள்
பூம்பொழில் சூழ் வேங்கடவா இவளை நீயே கேள்

சிலேடை: 
ஆதியில் உருவம் குறுகியதால் பின்னோர் நாள் 
ஆழி நீர் அருந்தியதால் மற்றாங்கே 
ஆலவாயன் தமிழால் புகழ் பெறலால்  
ஆங்கே குறு முனியோடொற்றாளவள்

கூறின், பொருளுடையோர் மாட்டே உலகு 
தேறின் , அருளும் அறனுடையோர் மாட்டே ;
கூற்றம் என்றும் அச்சமுடையோர் பால்; எதுவும் 
மாற்றம் என்றுணர்வார்க்கில்லை மரணம்

கல்லாதான் கண் உரைக்கும் அரும்பொருள் - மாண்பு 
இல்லாச் சிறியோர் ஈந்த இழி பொருள் ; கோல் செம்மை 
இல்லாக் காவலன் பால் செய்யும் சேவகம்; இவை மூன்றும் 
பொல்லா முன் வினையின் பயனே கேண்மின்

தருக்கே கொண்டு சினந்தொழுகுவார் தம் வாழ்வில் 
பருப்பொருள் என்றும் உணர்வுறார்; மறையுரைக்கும் 
கருப்பொருள் தன்னை உய்த்துணர்ந்தார் இவ்வுலகில் 
உருக் கொண்டோர் ஆயினும் உருவிலார்

தம்மின் கற்றார் முன் பணிவும் -செழுங்குலத்துச் 
செம்மையுடையார் கண் நட்டலும் இல்லார்க்கு 
அறிந்து ஈதலும் வாட்கண் பிறை நுதலாய் மூன்றும் 
செறிந்து வாழ்தலின் வழி இரண்டில்.

இரந்து வாழ்வதிற்  பெரிதாம்  பொருள் போற்றும் இவ்வுலகில்
கரந்துறைதல் ; ஈட்டிய திரவியம் நவமணி பொன் ஒன்றும்
கரவா வறியவர்க்கீந்து  குறை களைந்திசை  பட வாழும்
வர மருள்வாய் இறையொரு பாகத்து அபிராமியே

நான் பயின்ற பல்கலைக் கழகம்

அம்மா நீயே எனக்குக் கற்பித்தாய்
வாசிக்கவும் யோசிக்கவும் நேசிக்கவும்
ஒன்று அறிவைக் கூட்டியது
ஒன்று மனத்தை மீட்டியது
ஒன்று இறையை என்னுள் பூட்டியது 
இசையும் இலக்கியமும் என்னுள் முகிழ்க்க 
நீயல்லால் வேறொரு காரணமில்லை
வாழ்க்கை என்பது மனத்தால் வாழ்வது
மனத்தைப் போற்ற உன்னிடம் பயின்றேன்
அப்பா கற்பித்தது கணிதம் 
ஆனால் நீ என் கணினியே ஆனாய்
காகிதம் சொல்லும் நீ கற்றது  பத்தாவதென்று
ஆனால் நீ பெற்றது பல முனைவர் பட்டம்
பொறுமையில் சகிப்புத் தன்மையில் விட்டுக் கொடுத்தலில் 
குழந்தை வளர்ப்பில் உளவியலில்
உண்மையில் அம்மா நீ ஒரு பல்கலைக் கழகம்

ஈன்று புறந்தந்து உணர்வுற உயர்வுற
ஈங்கு உறவுறவும் மகிழ்வுறவும் கற்பித்த தாயும்
வாழ்வையோர் கணிதமாய் வாழ்ந்து
வானுறும் அறிவால் மாலென உயர்ந்து
"மனிதரை, வாழ்க்கையைக் கணி" என்ற 
மாமேதையும் வாழ்வில் இணைந்த திரு நாள்
மாலுறை திருத்தலமோர் நூற்றாறும்
நாலு மறை ஈசன் தலம் பனிரெண்டும்
இணைந்தே சென்று வழிபட்டதோர் தெய்வப்
பிணைப்பில் உதித்த நாம் தன்யரே


ஐந்தாம் மறை

துள்ளும்  வயதில்  பள்ளிக்கு அனுப்பித் தந்தையின் கடனாற்றினாய்
பள்ளியில்  கணிதப் புதிர் கண்டு மற்றவர் மலைத்து நிற்க
சுடு சொல் ஆசிரியன் தானும் அயர்ந்து நிற்க 
சடுதியில்  இடும் திறன் தந்து   அனைவரை வியக்க வைத்தாய்
நல்லாசிரியரும் ஆர்வமிகு   நண்பனும் நயந்து  அடுக்க
கல்வியில் பள்ளியில் கோலோச்சும் அரியணை இருத்தினாய்;
வாழ்வைக் கலையாய் அன்னை காட்ட வாழ்க்கை நுகர்ந்தேன்
வாழ்வையோர் அறிவியலாய் நீ காட்ட அச்சம் தவிர்த்தேன்
யாமறிந்த தலைமுறையில் நின்னை நிகர்த்ததோர் அறிவுத்திறன்
தாம் பெற்றோர் யாருமில்லைஎன்றும் எங்கும் உரைப்பேன்
பொருள் ஏதாயினும் பொதுவில் வைத்துண்ணும் பாங்கும்
அருமை மக்களின் நன்மை நாடி  செய்தொழில் உயர்வு துறந்ததும்
எங்கும் எதிலும் நுண்ணியதோர் பார்வையும் தர்க்கித்துப்
பாங்குடன்  பகுத்து ஆராய்ந்து  தெளியும் திறனும்
எண்ணிற் பெருமை தரும்என்றும் இதை
நண்ணிப் பேணுவோம் போற்றுவோம் யாம்
தந்தையே ஆசானாகும் பாக்கியம் அரிது
இந்த ஆசானை என்னவென்று   அழைப்பதுசிந்தித்தேன்
எல்லோரும் துரோணன் என்பர்;எனக்கு உடன் பாடில்லை
நல்லதோர்  குருவென்று   நான் அவனை ஒவ்வேன் ; எமக்கு நீ வியாசன் ; 
வேத குரு  தந்ததும் தொகுத்ததும் நான்கு மறை
தாத ! நீ படிப்பித்தது வாழ்வியலெனும்  ஐந்தாம் மறை


தோழி


ஆல் போல் தழைத்துப் படர்ந்து உயர்ந்தாலும் 
ஆங்கோர் வேரடி நீ எனக்கு நீயின்றி நானில்லை 
ஆழியுட் துயில் மாலுக்கோர் திருமகளாம் 
தோழி நீயிருப்ப வெல்வம் யாம் இவ்வுலகை 


0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home